கோவை வாலிபர் கொடூர கொலை – ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகி கைது..!

கோவை அருகே காதல் தகராறில் பயங்கரம் கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை. தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கைது..

கோவை அருகே உள்ள வேடபட்டி, வெள்ளியங்கிரி வீதியை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் ஜெகன் ராஜ் (வயது 30) பெயின்டர். நம்பியழகம்பாளையம்.வி.டி..எஸ் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் மதன்ராஜ்( வயது 32) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் ஜெகன் ராஜ் மதன்ராஜிடம் செல்போன் வாங்கி தருமாறு கூறி ரூ 4ஆயிரம் பணம் கொடுத்தாராம். இவர் செல்போன் வாங்கி கொடுக்கவில்லை . இது பற்றி கேட்பதற்கு ஜெகன் ராஜ், நேற்று இரவு நம்பியழகம்பாளையத்தில் மதன்ராஜ் வீட்டிற்கு வந்தார். அங்கு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து ஜெகன்ராஜை சரமாரியாக குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த ஜெகன் ராஜ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி .ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் ஜெகன் ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் வாங்கித் தருமாறு மதன் ராஜிடம் ரூ 4ஆயிரம் கொடுத்திருந்தாராம் .மதன்ராஜ் செல்போன் வாங்கி கொடுக்கவில்லை.மேலும் ஜெகன் ராஜின் அக்காவுடன் மதன்ராஜ் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம் . இது ஜெகன் ராஜ்க்கு பிடிக்கவில்லை. இதனால் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மதன்ராஜ் இன்று கைது செய்யப்பட்டார் . இவர் ஜான்பாண்டியன் கட்சியான தமிழக மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..