ஓபிஎஸ் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி..!

ரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார்.

இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.இந்த தேர்தலில் பாஜக போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதோடு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் பாஜக சார்பில் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை என்பது பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உறுதிப்படுத்தி இருந்ததே என்று சொல்ல வேண்டும். திடீரென இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுவதாக அறிவிக்க தமிழக பாஜக சற்று பின்வாங்கியது. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அதிமுகவை சேர்ந்த இரண்டு அணிகளும் தமிழக பாஜகவின் அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்து ஆதரவை கோரின.

இந்த நிலையில் ஓபிஎஸ் தலைமையிலான அணி முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பாஜக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காவிட்டால் உடனே வேட்பாளரை அறிவிக்க உள்ளனர் என்பதே அந்த தகவல். இதுகுறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன்.

இதுபற்றி பேசும் போது, வேட்பாளர் மக்கள் மத்தியில் அறிமுகம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் முடிவெடுத்துள்ளார். எம்ஜிஆரால் கலை உலக வாரிசு என அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் கலையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி தனி முத்திரை பதித்துள்ளார். அவரது சொந்த ஊர் கோபிசெட்டிப்பாளையம். எனவே அவரை நிறுத்துவது அல்லது அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ள புகழேந்தி  நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புகழேந்தி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது சொத்துக்களை பிணையாக வழங்கியவர் என்பதாலும் சிறந்த பேச்சாளர் என்பதாலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பேட்டிகளிலும் பேசி பொதுமக்கள் பாராட்டுகளை பெற்று வருவதாலும் அவரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவரது உறவினர்கள் ஏராளமானோர் ஈரோட்டில் உள்ளார்கள்.சிறு வயதில் இருந்தே ஈரோடு மக்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது.

எனவே ஈரோடு தொகுதி குறித்து நன்கு அறிந்தவர். எனவே பாக்கியராஜ் அல்லது புகழேந்தியை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஓபிஎஸ் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளார். இதனிடையில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஈரோடு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கோவிந்தன், ஈரோடு மாநகர மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன் போன்றவர்களும் போட்டியில் உள்ளனர்’ என்று கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக வலுவான வேட்பாளரைத் தான் களத்தில் இறக்குவார். அதற்கு ஈடாக ஓபிஎஸ் கட்டாயம் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். அதனால் அநேகமாக அது பாக்யராஜாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.