4 மாநிலங்களில் வெற்றி முத்திரை பதித்தது போல தமிழகத்திலும் பாஜக ஆட்சி வரும்- அண்ணாமலை கருத்து..!

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் தமிழ்நாடு பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , பாஜக ஆட்சியில் வாழ்வாதாரம் உயர்ந்ததால், உ.பி., மக்கள் பாஜகவின் நிரந்தர வாக்காளர்களாக மாறி உள்ளனர். மறுபடியும் ஒருமுறை இந்தியா, ஒருமித்த குரலில் நாம் மோடியுடன் பயணிப்போம் என்ற வார்த்தையை உறுதியுடன் பதிவு செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் மதத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் இருந்தது இப்போது அது உடைக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் கொரோனாவை கையாண்ட விதத்திற்குத்தான், மக்கள் வெற்றியை அளித்துள்ளனர். உ.பி.யில் 33 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சி ஆட்சியை பிடிக்கிறது. 2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகி விட்டதாக தேர்தல் ஆணையர் கூறி உள்ளதால் 2024அல்லது 2026-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம்.

சட்டமன்ற தேர்தலில் மணிப்பூர், கோவாவை போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.