ஆன்லைன் ரம்மிக்கு தடை.. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய முடிவு..!

சமீப காலமாக, ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல்வரிடம் கடந்த மாதம் 27-ம் தேதி தாக்கல் செய்தது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டம் இயற்றுவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.