பெங்களூருக்கு விரைவில் வருகிறது ஆஸ்திரேலிய துணை தூதரகம்.. ஆண்டனி அல்பானீஸ் அதிரடி அறிவிப்பு..!

பெங்களூரு: பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த நிலையில், அல்பானீஸ் இன்று மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.

குவாட் உச்சி மாநாட்டின் கூட்டங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் குறித்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று சிட்னியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்று வசிக்கும் இந்திய சமூகத்தினர் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிட்டினியின் ஹாரிஸ் பூங்கா பகுதியில் குட்டி இந்தியா எனும் பகுதி உருவாக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அல்பானீஸ் கூறியுள்ளார். இதனையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் இதற்கு அடிக்கல் நாட்டினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அல்பானீஸ், “நான் இந்த மேடையில் பிரபல பாடகர் ராக்ஸ்டார் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை இங்கு பார்த்திருக்கிறேன். அவர் அவருக்கு கிடைத்த வரவேற்பை விட நரேந்திர மோடிக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தியாவை பொறுத்த அளவில் அது ஒரு சிறப்பான அழகான நாடு. இந்திய பெருங்கடல் பரப்பில் இருக்கும் முக்கியமான நாடும் கூட. நான் பிரதமராக பதவியேற்று ஏறத்தாழ ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஆனால் நாங்கள் இதற்கிடையில் 6 முறை சந்தித்துக்கொண்டோம். இந்த சந்திப்புகள் இந்தியாவுக்கும்-ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.

மட்டுமல்லாது இது ஒரு ஜனநாயக நாடும் கூட. எனவே இதில் முதலீடுகளை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். அதேபோல அங்கிருந்து இங்கு புலம்பெயர்ந்து வந்த மக்களால் ஆஸ்திரேலியாவும் வளமிக்கதாக மாறியுள்ளது. இரு நாட்டிற்குமான உறவை கிரிக்கெட் போட்டிகள் மேலும் பலப்படுத்துகின்றன. மீண்டும் ஓர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் மோதுவோம்” என்று கூறியிருந்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியர்களும் ஆஸ்திரேலிய மக்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளால் இணைந்து இருக்கிறோம். கிரிக்கெட் இந்த இணைப்பு பாலத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. இந்த இரு நாடுகளும் சுகங்களை மட்டுமல்ல, துங்கங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். இந்நாட்டின் ஸ்பின் பவுலர் ‘ஷேன் வார்னே’ மரணம் லட்சக்கணக்கான இந்தியர்களை துயரத்தில் ஆழ்த்தியது.

இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு நீண்ட நாட்களாக பிரிஸ்பேனில் இந்திய தூதரகம் திறக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கிறது. இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்பானீஸ், “பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் விரைவில் திறக்கப்படும். இந்த தூதரகம் ஆஸ்திரேலிய வணிகங்களை இந்தியாவுடன் இணைக்கும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரில் பெங்களூருவில் நடைபெற்ற, ‘பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில்’ இது குறித்து வெளியுறவுத்துறை உதவி அமைச்சர் டிம் வாட்ஸ் பேசியிருந்தார். திட்டமிடப்பட்டபடி இந்த தூதரகம் திறக்கப்பட்டால் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் தூதரக அலுவலகத்தின் எண்ணிக்கை 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.