ஆடி காத்துல உயருது காற்றாலை மின் உற்பத்தி… இவ்வளவு யூனிட் மின்சாரமா..?

சென்னை: ஆடியில் மாதத்தில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

நேற்றுமுன்தினம் வரை 41.5 சதவீதம் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு அலகுகளை கொண்ட 840 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் மின் தேவை 11 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்ததாலும் காற்றாலை மின் உற்பத்தி மூலமாக 8 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கிடைப்பதாலும், சோலார் மூலமாக 3,000 மெகாவாட் மின் உற்பத்தி கிடைப்பதாலும் மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 365 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதேபோன்று 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள நான்கு அலகுகளில் 1வது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள மூன்று அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்து மீண்டும் தமிழகத்தில் மின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 ஆயிரம் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்று அதிகமாக வீசும்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது. அந்த வகையில் ஆடிமாதமான தற்போது காற்றாலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரிரெங்கையன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ் மாதமான ஆடியில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 41.5 சதவீதம் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியஒளி மின்சக்தி, அனல், நீர்மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு மின் உற்பத்தியில் 4-ல் 3 பங்கு மரபுசாரா மின்சக்தி மூலம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காற்றாலைகளில் இருந்து 100 மில்லியன் யூனிட்களுக்கும் குறைவான ஆற்றல் பெறப்பட்டு வந்தது.

காற்றின் வேகத்தை பொறுத்து அது சில நேரங்களில் ஒற்றை இலக்கமாக இருக்கலாம். ஆடி பருவத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தமிழக காற்றாலைகளில் இருந்து அதிகபட்ச சக்தியான 119 மில்லியன் யூனிட்டை நேற்று முன்தினம் பெற்றுள்ளது. முந்தைய ஆடி பருவத்துடன் ஒப்பிடுகையில், நேற்று முன்தினம் பெறப்பட்ட மின்சக்தியின் அளவு மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இது அனல் மின் பயன்பாட்டைக் குறைக்கும் என்பதால், தமிழக மின்பகிர்மான கழகத்துக்கு இது பயனளிக்கும். ஜூலை 9ஆம் தேதி வரை காற்றாலைகளில் இருந்து பெறப்பட்ட 340 மில்லியன் யூனிட் மின்சாரத்தில் 120.25 சதவீதம் மின்சாரத்தை தமிழக மின்பகிர்மான கழகம் பெற்றுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் வரை காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.