டெஸ்ட் தொடரில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் சம பலத்தில் உள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சௌராஷ்டிரா மைதானத்தில் துவங்கியது.

இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், நேற்று 2ம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்கிற சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வினின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது