முதியவருக்கு அறுவை சிகிச்சை இன்றி இதய குழாயில் அடைப்பு நீக்கம் – திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை..!

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்தில் முதல் முறையாக 63 வயது மதிக்கத்தக்க அமர்நாத் என்ற நோயாளிக்கு இருதய குழாயில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அரசு மருத்துவமனையின் முதல்வர் நேரு தெரிவித்ததாவது; வழக்கமாக இருதய குழாயில் ஏற்படக்கூடிய அடைப்புகளை சரி செய்வதற்கு ஆஞ்சியோ செய்யப்படுவது வழக்கம். ஆனால் இவருக்கு சுழற்சி ஆஞ்சியோ செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளது. இரத்த குழாயில் அதிகமான கால்சியம் படிமங்கள் இருந்தது அகற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

இந்த சிகிச்சைக்கு வெளியே தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் 8 லட்சம் வரை செலவாகும். ஆனால் தமிழ்நாடு முதல்வரின் விரிவான அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடியாகவும்.
இரத்த குழாய்களில் ஏற்படக்கூடிய இது போன்ற கால்சியம் படிமங்கள் பெரும்பாலும் இரத்த கொதிப்பு, புகைப்பிடிப்பவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு இது போன்ற அடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இருதய குழாய்களில் அதிகமாக கால்சியம் படிமங்கள் உள்ளது.

இந்த இரண்டு பல்வேறு மாவட்டங்களில் 30 சதவீதம் பேருக்கு ரத்த குழாய்களில் கால்சியம் படிமங்கள் இருப்பது ஆய்வில் தெரிய வருகிறது. தற்போது இந்த நோயாளிக்கு செய்யப்பட்டுள்ள சிகிச்சையானது ரோட்டோ ஆப் லெட்டர் என்று சிகிச்சை முறையை கையாண்டு அரை மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் மூன்று நாளைக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல் நலம் நல்ல முறையில் உள்ளது என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் முனுசாமி, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜா உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் உடன் இருந்தனர்.