அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு..!!

ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று காலை தொடங்கியது.

அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகிய மூன்று தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். மேலும், எழுத்துப்பூர்வ வாதங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.