அம்பானியை முந்திய அதானி: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார்..!

இந்திய தொழில் அதிபர் கௌதம் அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

கௌதம் அதானி (Gautam Adani) என்ற இந்திய கோடீஸ்வரர், சிறு நிலையில் தொடங்கப்பட்ட வர்த்தகத்தை, மிகப்பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக, துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றியுள்ளார். இப்போது ஆசியாவின் பணக்காரராக விளங்குகிறார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் (Bloomberg Billionaires Index) வெளியான தகவல்கள், 59 வயதான தொழில் அதிபர் சொத்துக்களின் நிகர மதிப்பு திங்களன்று $88.5 பில்லியன் என்ற அளவை எட்டியது என தெரிவிக்கின்றன. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட $12 பில்லியம்ன் அதிகரித்து, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், அதானி ஏழு விமான நிலையங்களின் கட்டுப்பாட்டை பெற்றுள்ளதோடு, இந்தியாவின் விமானப் போக்குவரத்து சேவையில் கிட்டத்தட்ட 25% இயக்குகிறது. அதானி குழுமம் தற்போது நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து சேவை வழங்கு ஆபரேட்டராக உள்ளதோடு, மின் உற்பத்தி மற்றும் எரி வாயு துறையிலும் தனக்கென ஒரு இடத்தைபிடித்துள்ளது.

இவர் உலகளவில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவில் அதானி முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவிலான பணக்காரர் பட்டியலில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் 23,230 கோடி டாலர் சொத்துகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். பேஸ்புக் ( Facebook) பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்ததாக வெளியான தகவலை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் விலை சரிந்த்தால், மார்க் ஜக்கர்பர்க் 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.