வீட்டின் முன் திரண்டு இருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினி..!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ்புத்தாண்டை ஒட்டி சென்னை போயாஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இன்று காலை முதலே அவரது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களில் ஒருவர், தாமரைப்பூவை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த், பதிலுக்கு வாழ்த்தினை தெரிவித்தார்.

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் பண்டிகை காலங்களில் சென்னையில் இருக்கும்பொழுது, வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களை கையசைத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். கடந்த டிசம்பர் மாதம் அவரது பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் ரஜினிகாந்தின் வீட்டின் முன் வந்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் இருந்ததாக கூறப்பட்டது. அதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தன்று வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல, தமிழர் திருநாள், பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தனது வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்தினை தெரிவிப்பார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று தமிழ்புத்தாண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காலை முதலே நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர். இதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டின் வெளியில் நின்றிருந்த ரசிகர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்தார். இதுகுறித்து ரசிகர்கள் பேசியபோது, காலைமுதல் இருந்தே காத்திருந்தோம், ரஜினிகாந்த வருவாரா? மாட்டாரா? என்பது சந்தேகமாக இருந்தது. எனினும் இறுதியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சென்றதே மட்டற்ற மகிழ்ச்சி என்று தெரிவித்தனர்.