ஆதரவு தந்தால் ஏற்பு.. தராவிட்டாலும் ஓகே தான்.. இனி பாஜகவிடம் எந்த பேச்சுவார்த்தையும் வேண்டாம் .. இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இபிஎஸ் போட்ட உத்தரவு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜ ஆதரவு அளித்தால் ஏற்று கொள்வோம். வராவிட்டாலும் சந்தோஷம் தான் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்து விட்டார்.

இதனால், பாஜவை கழற்றி விட எடப்பாடி முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாஜவுடன் இனி எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட வேண்டாம் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, அண்மையில் உடல்நலக்குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஆனால், அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இதுவரை வேட்பாளர்கள் குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதிமுகவில் எடப்பாடியை பொறுத்தவரை ரொம்ப பிடிவாதமானவர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் பாஜ தலைவர் அண்ணாமலையிடம் பேசினார். மேற்கு மண்டலத்தில் நாங்கள் நிற்க போகிறோம். தமாகா நின்றால் ஆளுங்கட்சி எளிதில் வெற்றி பெற்று விடும். அது மட்டுமல்லாமல் செலவும் செய்ய மாட்டார்கள். அதனால், நாங்கள் நிற்கிறோம் என்று தனது கருத்தை எடப்பாடி தெரிவித்தார். இதனை அண்ணாமலை ஏற்று கொள்ளவில்லை.

இதற்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசனை நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார். இடைத்தேர்தலில் நிற்க சொல்லி தமாகா தலைவர் வாசனை, பாஜ தலைவர் அண்ணாமலைதான் முதலில் தூண்டி விட்டார். அதாவது, ‘நீங்கள் நில்லுங்கள்; நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வாசன் போய் எடப்பாடியிடம் சீட் கேட்டாராம். அதற்கு எடப்பாடி நாங்கள் நிற்க போகிறோம். நீங்கள் நின்றால் தோல்வியை தான் சந்திக்க வேண்டும். டெபாசிட் போய் விடும். எங்கள் ஆட்களும் ஒழுங்காக வேலை பார்க்க மாட்டார்கள். நாங்கள் நின்றால் ஒழுங்காக வேலை பார்ப்பார்கள்.

செலவு செய்வார்கள். அதனால், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று எடப்பாடி கூறிவிட்டார். இதனையடுத்து ஜி.ேக.வாசனும் போட்டியில் இருந்து பின்வாங்கினார். அண்ணாமலைக்கு இது பெரிய ஷாக்கை ஏற்படுத்தியது. அதிமுக நிற்க கூடாது என்று பார்த்தோம். அதே நேரத்தில் பாஜவை நிறுத்தலாமா என்று மேலிடத்திடம் அண்ணாமலை கேட்டார். பாஜ நிற்க வேண்டாம் என்று மேலிடம் கூறிவிட்டது. தேவையில்லாத செலவு. தோற்று போய் விடுவோம். அசிங்கப்பட வேண்டியது வரும். இதனால், இடைத் தேர்தலில் நிற்க வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலில் பார்த்து கொள்வோம். அதுவரை தேர்தலில் நிற்க வேண்டாம். நின்றால் கூட்டணியில் பிரச்னை ஏற்படும் என்று கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அண்ணாமலையை, எடப்பாடி அணியினர் போய் சந்தித்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் திடீரென நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்தார். இதை பார்த்து பாஜ மீண்டும் ஷாக் ஆனது. ஓபிஎஸ்சும் பாஜ அலுவலகத்துக்கு சென்று ஆதரவு கேட்டார். எனக்கு ஆதரவு கொடுங்கள் என்றார். இதனால், யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் பிரச்னை ஏற்படும் சூழல். இதனால், பாஜ எந்த அணிக்கு ஆதரவு அளிக்க போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் அண்ணாமலை ‘டபுள் கேம்’ ஆடுகிறார் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இரண்டு பேரும் அண்ணாமலையை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனர்.

எடப்பாடியை, கவுண்டர்கள் சமுதாயத்தினர் அதிகம் இருக்கும் பகுதியில் வளர விடக்கூடாது என்பதற்காக அண்ணாமலை வளர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்று எடப்பாடி தரப்பு கருதுகிறது. ஓபிஎஸ் கவுண்டர் சமுதாயத்தினருக்கு சப்போர்ட் செய்வார் என்று அண்ணாமலை நினைக்கிறார். இது தொடர்பாக மேலிடத்தில் அண்ணாமலை தெரிவிக்கும்போது, இடைத்தேர்தலில் பாஜ நடுநிலை வகித்து விடலாம் என்ற முடிவுக்கு பாஜ வந்து விட்டதாக கூறப்படுகிறது. இது எடப்பாடிக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்து விட்டார். இனிமேல் பாஜவிடம் போய் யாரும் ஆதரவு கேட்க வேண்டாம். பாஜ ஆதரவு தேவையில்லை. கொடுத்தால் ஏற்று கொள்வோம். கொடுக்கவில்லை என்றாலும் பராவாயில்லை.

அவர்கள் என்ன முடிவு வேண்டுமென்றாலும் எடுத்து விட்டு போகட்டும். அவர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அதே முடிவை நாடாளுமன்ற தேர்தலில் நாம் எடுப்போம். அதனால், இனி யாரும் பாஜ கதவை தட்ட வேண்டாம். பாஜவிடம் யாரும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம் என்று 2ம் கட்ட தலைவர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டார். அதாவது, பாஜ பற்றியும் கூட்டணி பற்றியும் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டார். அதிமுக பற்றியும், அதிமுக வேட்பாளர் பற்றி மட்டும் பேசுங்கள். மக்களிடம் ஓட்டு கேளுங்கள். பாஜ என்ன முடிவை எடுத்தாலும் சந்தோசம் தான். சப்போர்ட் செய்தாலும் சந்தோஷம், சப்போர்ட் செய்யாவிட்டாலும் சந்தோஷம் தான். தனித்தே போட்டியிடுவோம் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்து விட்டார். பாஜவை கழட்டி விட எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் நீங்கள் போட்டியிடுங்கள். இல்லாவிட்டால் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று பாஜவிடம் கேட்கிறார். ஆனால், இப்போது பாஜ நடுநிலை வகிக்க போவதாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதாவது, தேர்தலை புறக்கணிப்போம். அதே நேரத்தில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜ இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதால், நம் நடவடிக்கையை மட்டும் தொடருவோம். தேர்தல் நடவடிக்கையை நிறுத்த வேண்டாம்.

பாஜவுக்காக காத்திருக்கும் நிலை வேண்டாம் என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அதனால், தான் எடப்பாடி இதுவரை கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டவே இல்லை. பாஜ இதுவரை அறிவிக்காததால், அதிமுகவினர் நடத்தும் கூட்டத்தில் இதுவரை பாஜவுக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. தமாகா மட்டும் தான் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறது. ஈரோட்டில் புதிய நீதிக்கட்சிக்கும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் பாஜவுக்கு ஆதரவு அளித்து விட்டதால் அவர்களையும் ஊழியர்கள் கூட்டத்துக்கு அழைப்பதை எடப்பாடி தரப்பு புறக்கணித்துவிட்டது.

அதேநேரத்தில், அதிமுகவுக்கு உரிமை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். தற்ேபாது இரட்டை இலைக்காக மீண்டும் தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. இது தொடர்பாக இன்று ஓபிஎஸ் தரப்பும் மனு தாக்கல் செய்ய உள்ளது. ஒன்று மனுதாக்கல் செய்ய நேரம் கேட்பார்கள். இதனால், நீதிமன்றம் என்ன பதில் சொல்ல போகிறது என்று தெரியவில்லை. இடைத்தேர்தல் இருக்கிறது. அதனால், நேரம் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் சொன்னால், எங்களுக்கு நேரம் வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கேட்கும்.

அப்படி இழுத்தார்கள் என்றால், இன்றைக்கு முடிவு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பு இழுத்தார்கள் என்றால் வழக்கு தள்ளிப்போக வாய்ப்பு உருவாகும். அதனால், உடனடியாக இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வேட்புமனு தாக்கல் செய்தால், இக்கட்டான நிலையை உருவாக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர் கையெழுத்து போட்ட ‘பி’ பார்ம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் ஏற்று கொள்ளும். அதிமுக என்று கொடுத்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள். தள்ளுப்படி செய்ய கூட வாய்ப்பு இருக்கிறது.

இதனால், எடப்பாடி சுயேட்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாக்க தான் ஓபிஎஸ் தரப்பு நேரம் கேட்க இன்று திட்டமிட்டுள்ளனர். வழக்கு தள்ளிப்போனால், மனுதாக்கலுக்கு உள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடி அணிக்கு ஏற்படும். சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய போகிறார்களா அல்லது அதிமுக என்று வேட்புமனு தாக்கல் செய்ய போகிறார்களா என்ற குழப்பம் உருவாகும். அதே நேரத்தில் இன்று தீர்வு காண்பது என்பதும் பிரச்னை தான். தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூற முடியாது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க போகிறார்கள். அதே நேரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மோதலால் அதிமுக தொண்டர்கள் உச்சக்கட்ட குழப்பம் அடைந்துள்ளனர்.