சீனா தனது 140 கோடி குடிமக்களை கேமராக்கள், மொபைல் சிக்னல்கள் மற்றும் தேசிய அடையாளப் பதிவுகள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினரையும் சீனா எவ்வாறு நுட்பமாகக் கண்காணிக்கிறது என்பதைச் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான மார்க் ஹோஃபர் தற்செயலாகக் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளார்.
சீனாவின் ஜாங்ஜியாகூ நகரில் வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க “Dynamic Control Platform for Overseas Personnel” என்ற பெயரில் இயங்கிய இணையதளத்தை மார்க் ஹோஃபர் கண்டறிந்தார். அதில் அவரது புகைப்படத்துடன் பாஸ்போர்ட் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தத் தளத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் விவரங்களும், ஒட்டுமொத்தமாக 12,000-க்கும் மேற்பட்ட தரவுப் பதிவுகளும் பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்தன.இந்தத் தரவுத்தளத்தில் சீனாவில் உள்ள மருத்துவமனைப் பதிவுகள், கேஸ் பில்கள், விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்த இருக்கை எண்கள், ஸ்கை ரிசார்ட் வருகை மற்றும் கேமராக்கள் பதிவு செய்த முகங்கள் வரை அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டிருந்தன.இந்த அமைப்பு வெளிநாட்டினரை அவர்களின் நாடு மற்றும் பின்னணிக்கு ஏற்ப பல்வேறு வகைகளாகப் பிரித்து வைத்திருந்தது. ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை ஃபைவ் ஐஸ் அலையன்ஸ் என்ற அமைப்பின் கீழ் வகைப்படுத்தியிருந்தது.
எகிப்து, ஈரான், இஸ்ரேல், மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ‘முக்கிய நாடுகள்’ என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஹாங்காங், தைவான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மற்றும் ஜாங்ஜியாகூவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய மாணவர்களின் மதம், திருமண நிலை மற்றும் வளாகத்திற்குள் நுழையும் நேரங்கள் வரை இதில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
பெய்ஜிங்கைச் சேர்ந்த ‘ஆரிஜின் டைனமிக் என்ற நிறுவனம் காவல் துறைக்காக இந்த மென்பொருளை உருவாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனிநபர் தரவுகள் எவ்விதப் பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








