சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரரின் காதை கடித்த குடிபோதை போலீஸ்- கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாயினால் கதவை மூடி வைத்து விட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம். இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்பாயினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்டம் சேர்ந்த முகமது ஆஷிக் என்பவர் சிகரெட் வேண்டும் என கேட்டுள்ளார். நான்கு சிகரெட்களை கொடுத்து விட்டு 54 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஆஷிக் தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு காலையில் வந்து பணம் தருவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் முகமது ஆசிக் பேடிஎம் மூலம் 50 செலுத்தினார். மீதம் நான்கு ரூபாயை செல்வ சிவா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தாக்கியோடு அவரது காதை கடித்தார். இதனால் வலியால் துடித்த செல்வ சிவா உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் முகமது ஆசிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.