அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்-புகழேந்தி பேட்டி..!

ஞ்சையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “ஓ.பன்னீர்செல்வம் தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர். அவரது அனுமதி இன்றி எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றது தான் அத்துமீறல். அலுவலகம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நாங்கள் அலுவலகத்திற்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள். ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தான் சொல்லி இருக்கிறதே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச் செயலாளர் என எந்த இடத்திலாவது சொல்லப்பட்டு இருக்கிறதா? அவராகவே அந்த பதவியை பயன்படுத்தி கொள்கிறார்.
கழக பணியாற்றிட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் செல்வார்கள். நாங்களும் செல்வோம். கோர்ட்டில் அனுமதி பெற்று வந்தால் தான் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்ல பாதுகாப்பு தருவோம் என கூறப்படும் தகவல் பொய்யானது. எல்லோரையும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருவதை வைத்திலிங்கமும் சொல்கிறார்.

சசிகலா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராகி இருக்க முடியுமா?யார் துரோகி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.ஜெயலலிதாவால் முதலமைச்சராக அமர வைக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து துரோகி என கூறுகிறார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஓ.பன்னீர்செல்வமும் அநாகரிகமாக பேசுவது இல்லை. யாரையும் இணையவிடாமல் எடப்பாடி பழனிசாமி செய்வதற்கு காரணம் என்ன? யார் காலில் விழுந்தாவது வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வை உடைக்க பார்க்கிறார். அவர் யாருக்கு ஆதரவாக இருப்பார் என்பதை காலம் பதில் சொல்லும். நாட்டு மக்கள் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது. அவரை முதலமைச்சராக ஆக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எடப்பாடி பழனிசாமி தனி மனிதனாக தவிக்கவிடப்படுவார். அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்” எனக் கூறினார்.