இப்படியும் ஒரு கொண்டாட்டம்… விவாகரத்தை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய நடிகை..!

ப்ரீ வெட்டிங், என்கேஜ்மென்ட் வெட்டிங், பிரக்னன்ஸி என திருமண நிச்சயதார்த்தம் முதல் கருவுற்று தாயாகப் போவது வரை வாழ்வின் கொண்டாட்ட தருணங்களை மட்டுமே போட்டோஷூட் செய்து பார்த்திருப்போம். ஆனால், திருமண உறவில் இருந்து விலகும் நிகழ்வை, கணவரை பிரியும் விவாகரத்தை விமர்சையாக போட்டோஷூட் செய்து, அதை வெளியிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் சின்னத்திரை நடிகை ஷாலினி.

ஜீ தமிழ் டிவி சேனலில் முள்ளும் மலரும் சீரியல் மூலம் ரசிகர்களிடையே ஷாலினி பிரபலமாகியுள்ளார். திருமணத்தின் தோல்வியை விவாகரத்து வெளிப்படுத்தினாலும், அதை எதிர்மறையாக பார்க்காமல், இத்தனை நாள் அனுபவித்த துயரத்தில் இருந்து விடுதலை என்ற கண்ணோட்டத்தில் அதை கிராண்டாக கொண்டாட முடிவு செய்து போட்டோஷூட் செய்த ஷாலினி, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தற்போது இ ணையதளத்தில் வைரலாகி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஷாலினி பதிவிட்டுள்ள புகைப்படங்களில் முன்னாள் கணவருடன் இணைந்திருக்கும் படத்தை கிழிப்பது போலவும், ஆங்கிலத்தில் விவாகரத்து என்று எழுதப்பட்ட ஆங்கில எழுத்துக்களை தோரணம் போல காண்பித்தும், சில புகைப்படங்களை காலால் மிதித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, உங்களுக்கும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கும் தேவையான மாற்றங்களைச் செய்ய தயாராகுங்கள். விவாகரத்து தோல்வி அல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனை. ஒரு திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. என்னைப் போன்ற துணிச்சலான அனைத்து பெண்களுக்கும் இதை சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள், ‘இவரது திருமண வாழ்வில் பிரச்னைகள் இருக்கலாம் அதற்கு இப்படி கொண்டாடுவதா?’ என ஒரு தரப்பினர் விமர்சிக்க, ‘நச்சுப்பிடித்த, அடக்குமுறையான உறவில் இருந்து விடுபடுவது உண்மையிலேயே ஒரு பெண்ணுக்கு விடுதலை தானே, அதை கொண்டாடுவதில் என்ன தவறு? என்று இன்னொரு தரப்பினர் ஷாலினிக்கு ஆதரவு தருகின்றன.