அங்கீகரிக்கப்படாத வீட்டு மனையா..?

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப கால அவகாசம் 30.06.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு எல்லாம் நன்மை, ஏன் இதனை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள 03.11.2017 வரை ஆறு மாத காலம் அவகாசம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்தக் கால அவகாசம் 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டது.

20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனிமனையினை வாங்கிய பொதுமக்கள் வரன்முறைக்கு உரிய காலத்தில் விண்ணப்பிக்காமல் இருந்தாலும் அவர்கள் பயன்பெறும் வகையில், 20.10.2016-க்கு முன் பதிவு செய்யப்பட்ட விற்பனை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அத்தனிமனையினை எவ்வித காலக்கெடுவுமின்றி இணைய வழிமூலம் விண்ணப்பம் பெற்று ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றமில்லாமல் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என அரசு ஆணையிட்டுள்ளது. இந்த கால அவகாசம் வழங்கப்பட்டமைக்கு, தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017- இல் உரிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நகர் ஊரமைப்பு ஆணையர் எழுதிய கடிதத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இன்றி இணையவழி மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் அமையும் விற்கப்பட்ட/விற்கப்படாத அனைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்திக் கொள்ள மேலும் 12 மாத காலங்களுக்கு நீட்டிப்பு வழங்குமாறு அரசினைக் கோரியிருந்தார்.நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்களின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து, 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப் பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைப்பிரிவிற்கும் வரன்முறைக்கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு எவ்விதமாற்றமும் இல்லாமல் 30.06.2027 வரை கால நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடுகிறது. மேலும், இத்திட்டத்தில் இணையவழி மூலம் மட்டுமே மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இயலும்.

தமிழ்நாடு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதி 2017-இல் இத்திட்டம் தொடர்பான உரிய திருத்தம் பின்னர் வெளியிடப்படும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்படாத வீட்டு மனையில் குடியிருப்பவர்கள் அரசின் சலுகையை பயன்படுத்தி முறைப்படுத்தி கொள்ளலாம். ஆனால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இப்படி விண்ப்பித்தவர்கள் மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம். இதன் மூலம் வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ எளிதாக முடியும். அரசின் பல்வேறு உரிமைகளை எளிதாக பெற முடியும். இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.