காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது எனும் பகுதியில் அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது.இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு மேற்குறிப்பிட்டவாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது.இந்த ஆண்டு போதுமான மழை இல்லை என்று கூறி, கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நீரை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர தமிழகம் முழுவதும் 22 மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.இப்படி இருக்கையில் தமிழக எம்பிக்கள் மேகதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி எம்பி சுதா, இது குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது.
இந்த பதிலில், மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மற்றும் விரிவான திட்ட அறிக்கை இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்று தெளிவாக கூறியிருக்கிறது. ஆனால், காவிரி நதி நீரை நம்பி இருக்கும் தமிழ்நாட்டின் ஒப்புதல் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. மத்திய அரசின் இந்த பதில் தமிழக மக்களிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.






