தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆண்டு தோறும் நடைபெறும் தேசிய போலியோ தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், சுமார் 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த முகாமை சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் குழந்தைகள் எளிதாக பயன்பெறும் வகையில் 43,051 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த மையங்கள் செயல்படவுள்ளன.
அதுமட்டுமல்லாமல், மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளும் பயனடையும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் வீடு தேடி சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளன.
போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா போலியோ இல்லாத நாடாக தனது நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள, பெற்றோர் அனைவரும் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள மையங்களுக்கு அழைத்துச் சென்று கட்டாயம் போலியோ சொட்டு மருந்து செலுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த முகாமை முன்னிட்டு, சென்னை பாலவாக்கம் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.









