விசிக போட்டியிடாது – திருமா திட்டவட்டம்!

ரவிருக்கும் இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், விசிக 100 சதவீதம் தேர்தல் களத்தில் இறங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கட்சியினருடன் ஃபேஸ்புக் வாயிலாக நடைபெற்ற உரையாடலில் அவர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.அதேநேரத்தில், கடந்த கால கூட்டணி அரசியல் மற்றும் தற்போதைய அரசியல் விமர்சனங்கள் குறித்தும் அவர் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தங்களை கூட்டணிக்கு அழைத்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் விசிக அக்கூட்டணியில் இணைந்திருந்தால் மாநிலத்தில் நிலையான அரசு அமைந்திருக்கும் என சிலர் இன்றளவும் கருத்து தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார்.ஆனால் அன்றைய சூழ்நிலையில் தான் எடுத்த அரசியல் முடிவு சரியானதுதான் என்ற நம்பிக்கையில் தற்போது கூட உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் விசிக மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய திருமாவளவன், அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.கட்சியின் அடிப்படை கொள்கைகள் மற்றும் அரசியல் பாதையிலேயே தொடர்ந்து பயணிப்போம் என்றும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு நேரடியாக பதிலளித்த திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தலில் களமிறங்காது என்று மீண்டும் வலியுறுத்தினார். அவரது இந்த அறிவிப்பு, கூட்டணி அரசியல் மற்றும் எதிர்கால தேர்தல் வியூகங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.