நீடித்த உழைப்பு எளிதில் சேதம் அடையாது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் தாள்களை பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டாக அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டே மத்திய அரசு இந்த முடிவு செய்தது. எனினும், சில நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், தற்போது மீண்டும் பிளாஸ்டிக் தாள்களை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில், 1 பில்லியன் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூ.10, 20, 50, 100, 500 தாள்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்த ரூபாய் தாள்களை அச்சிட கடந்த ஆண்டு மட்டும் ரூ.6,372 கோடி ரிசர்வ் வங்கி செலவிட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டான 2023-24 ல், ரூ.5,101 கோடி செலவிட்டுள்ளது.இப்படி பல ஆயிரம் கோடி செலவிட்டு ஆண்டு தோறும் புதிய தாள்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. ஏனெனில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்க கூடிய தாள்கள் கிழிந்து சேதம் அடைவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக குறைந்த மதிப்பு கொண்ட தாள்களான ரூ.10, 20 தாள்கள் அதிகம் கசங்கியும் கிழிந்த நிலையில் ஒட்டு போட்டும் ஒவ்வொருத்தர் கண்ணையும் தப்பி, புழக்கத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.
பயன்படுத்தவே முடியாத அளவுக்கு போகும் போது இவற்றை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்கிறார்கள். இப்படி மாற்றப்படும் ரூபாய் தாளுக்கு சேதத்திற்கு ஏற்ப மதிப்பிட்டு ரிசர்வ் வங்கி பணத்தை திருப்பி அளிக்கிறது. சமீப காலமாக உயர் மதிப்பு கொண்ட பணத்தாளும் அதிக அளவில் கிழிந்த நிலையில் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதாவது, கடந்த 2024-25 நிதி ஆண்டில் மட்டும் 2,357 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் கிழிந்ததால் திரும்ப பெறப்பட்டுள்ளன. இது கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் 2,124 கோடியாக இருந்தது. திரும்ப பெறப்பட்ட கிழிந்த நோட்டுகளில் ரூ.500 அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக ரூ.100 நோட்டுகள் உள்ளன. கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய பணத்தாள் அச்சிடும் பொது ரிசர்வ் வங்கி தேவையற்ற செலவுகள் அதிகமாக உள்ளது.
எனவே இதற்கு முடிவு கட்டும் விதமாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. காகித நோட்டுகளில் புழக்கத்தில் இருக்கும் போது சீக்கிரமாகவே கிழிந்துவிடும். ஆனால் பிளாஸ்டிக் ரூபாய் தாள்கள் என்றால் நீண்ட காலம் சேதம் அடையாமல் இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடலாம் என்று தெரிகிறது.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் ஏடிஎம்களிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அதற்கான பணிகளையும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதல் முதலாக ஆஸ்திரேலியா அறிமுகம் செய்தது. 1988 ஆம் ஆண்டு அந்த நாடு அறிமுகம் செய்தது. தற்போது சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, கனடா உள்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் உள்ளன.







