தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது.
ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் தனித்தேர்வர்கள், 395 சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 243 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். மொத்தம் 4 ஆயிரத்து 219 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.
இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்தன. அதே சமயம் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.இந்த நிலையில், இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று (20-05-26) காலை 9:30 மணிக்கு வெளியாகவுள்ளது. அதன்படி, மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் 7845252525 என்ற எண்ணிற்கு, ‘Hi’ என அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் ஐயங்கள் இருந்தால் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள தேர்வுத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனநல ஆலோசனைகளை பெற விரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற இலவச எண்ணை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








