பொன்னேரியில் தவெகவின் தெருமுனை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவதற்கு முன் அனுபவம் தேவை என உதயநிதி பேசியிருந்த பேச்சுக்கு, முதலிரவுக்கும் முன் அனுபவம் தேவையில்லை முதலமைச்சர் ஆவதற்கும் முன் அனுபவம் தேவையில்லை என தவெகவின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் முதலமைச்சர் பதவியை கொச்சைப்படுத்தும் வகையில் ஏராளமான பெண்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக வெற்றிக் கழக பொன்னேரி சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் ரவியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார். அப்போது கல்லூரியில் பயின்ற காலத்தில் பொன்னேரியில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் தமக்கு நாஞ்சில் சம்பத் என பெயர் சூட்டியதை நினைவு கூர்ந்தார். தன்னால் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் சென்று தலை காட்டுங்கள் என விஜய் தமக்கு ஆணையிட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். பொன்னேரிக்கு ரயிலில் வருவதற்குள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று விடலாம் என கூறினார். ஸ்டாலின் 25 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், எடப்பாடி 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், மகாத்மா காந்தி, பேரறிஞர் அண்ணாவிற்கு கூட கிடைக்காத இளைஞர்கள், விஜய்க்கு கிடைத்துள்ளனர் என்றும், அதிமுக, திமுக என்று மாறி, மாறி ஓட்டு போட்டு, நாறி நாறி போய் விட்டது என்றார்.
வைகோ தமது கட்சியை அறிவாலயத்தில் அடக்கம் செய்து விட்டார் எனவும், மூப்பனார் தொடங்கிய கட்சியை ஜி. கே.வாசன் குறைந்த விலைக்கு மோடிக்கு விற்று விட்டார் எனவும், விஜயகாந்த தொடங்கிய கட்சியை அவரது மனைவி திமுகவிற்கு 5 ஆண்டுகள் கொடுத்து விட்டார் என்றும், கமல்ஹாசன் டார்ச் லைட்டை அறிவாலயத்தில் தேடி கொண்டுள்ளார் எனவும், தற்குறி சீமான் என விமர்சித்தார். மேலும் விஜய் செல்லும் இடம் எல்லாம் சீமான் கட்சி அடக்கம் செய்யப்படுகிறது என்றார். ஸ்டாலின் இடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, எதையும் பூர்த்தி செய்யவில்லை என்றும், உதயநிதியை அதிகாரத்தில் வைக்க அனைத்தையும் செய்கிறார் எனவும், உதயநிதியை அடுத்த முதலமைச்சராக திமுகவில் வேலை செய்கிறார்கள், போஸ்டரில் அண்ணாவிற்கு இடம் இல்லை, உதயநிதியை முன்னிலைப்படுகிறார்கள் எனவும், இருவரின் விளம்பர மோகத்தில் தமிழ்நாடு மாறுகிறது என்றார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? 526 வாக்குறுதிகளில், 66 மட்டுமே நிறைவேற்றினார்கள், 273 முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும், 66 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றவில்லை என்பதை ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என கனிமொழிக்கு நாஞ்சில் சம்பத் சவால் விடுத்தார்.
5239 டாஸ்மாக் கடைகள் உள்ளன, 70 லட்சம் பேர் தினசரி குடிக்கிறார்கள், எதற்கெடுத்தாலும் குடிக்கிறார்கள் எனவும், என்னிடமே என்ன சரக்கு வேண்டும் என தாராபுரம் கூட்டம் முடிந்தவுடன் ஒருவன் கேட்டதாக நாஞ்சில் சம்பத் பேசினார். மது விற்றால் வருமானம் வரும் என அண்ணாவிடம் சொல்லிய போது, அதனை மறுத்து விட்டார் எனவும், படிப்படியாக தற்போது குடிக்கிறார்கள் எனவும், ஈரோட்டில் விதவிதமான பெயரில் மதுக்கூடங்கள் உள்ளன என்றார். ஹோட்டலில் சென்றால் ஆம்லெட் கூட இல்லை என்கிறார்கள் எனவும், மோடி ஆட்சியில் இருக்கும் வரை எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விஜய் ராம்ப் வாக் செல்வதை பார்த்து ஸ்டாலினும் ராம்ப் வாக் செல்கிறார், யானை ஆட்டுகிறது என்பதால், கழுதையும் ஆட்டலாமா எனவும், தவெக என கூறுவதற்கு ஸ்டாலினுக்கு பயம் என்றார். திமுக கூட்டங்களில் கூட்டமே இல்லை, ஸ்டாலின் பேச்சை கேட்பதற்கு யாரும் இல்லை எனவும் வெள்ளி நாற்காலியில் அமர மாட்டார் என எண்ணினேன், அப்போதே முதலமைச்சர் நாற்காலி விஜய்க்கு என்பது தெரிந்து விட்டது என்றார்.
5 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய கூட நடவடிக்கை இல்லை எனவும், அனைத்து பிரச்சினைகளுக்கும் மோடியை காட்டி விட்டு திமுக தப்பிக்கிறது என்றும், ஆகாஷ், ரித்திக் ஆகிய இருவரை கைது செய்த போது, உதயநிதியை கைதில் இருந்து பாதுகாக்க ஸ்டாலின் 5ஆம் ஆண்டில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றார் என கூறினார். விஜய் கூட்டத்திற்கு பட்டப்பகலில் 10 லட்சம் பேர் கூட்டம் கூடுகிறது எனவும், அனைத்து தலைவர்களும் இரவு கூட்டம் நடத்தினாலும், பகலில் பேசும் ஒரே தலைவன் விஜய் என்றார். பேரறிஞர் அண்ணா கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க 18 ஆண்டுகள் ஆனது எனவும், எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார் எனவும், விஜய் ஆட்சியை பிடிக்க 3 ஆண்டுகள் கூட தேவையில்லை என்பதை தேர்தல் முடிவு சொல்லும் என தெரிவித்தார். முதலிரவுக்கும் முன் அனுபவம் தேவையில்லை, முதலமைச்சராவதற்கும் முன் அனுபவம் தேவையில்லை என பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் அருவருக்கத்தக்க வகையில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
கிஷோர் சாமி, சவுக்கு சங்கர் போன்ற பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர், இதெல்லாம் பாசிசம் இல்லையா எனவும், வாக்கிற்கு 10000 ரூபாய் பணம் கொடுக்கும் அளவு பணம் உள்ளது, ஸ்டாலின் மருமகன் பணம் கொண்டு செல்வதாக தகவல் எனவும், தீயணைப்பு வாகனத்தில் பணத்தை கொண்டு செல்வதாக தகவல், முன்பு ஆம்புலன்சில் சென்றது, இப்போது தீயணைப்பு வாகனத்தில் பணம் செல்கிறது என சாடினார். பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் இல்லை, இயற்கை பேரிடர் கால பாதிப்புகள், பட்டா இல்லை, எனவும், எம்எல்ஏக்கள் அனைவரும் கோடி கோடியாக கடல் கடல் பணம் பதுக்கி உள்ளனர் எனவும், திமுகவினர் பணத்தை விநியோகித்தால் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள் என்றார். நடிகர் சிவாஜி கணேசன் வாக்கையே கள்ள ஓட்டு போட்டவர்கள் திமுகவினர், எச்சரிக்கையாக இருந்திட வேண்டும் எனவும், சுடுகாட்டில் கூட சமதர்மம் இல்லை, வாக்குச்சாவடியில் மட்டுமே சமதர்மம் உள்ளது, அனைவருக்கும் ஒரே வாக்கு தான் என கூறினார். நாஞ்சில் சம்பத் பேசி கொண்டிருந்த போது இடைவிடாது விசில் அடித்து தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத்திடம் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த கேள்விக்கு, 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு தவெக கண்டனம் தெரிவிக்கிறது என்றார். 5 மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறதா, இதில் தலையிட முடியாதா என வினவினார். 5 மாநில தேர்தலின் போது நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது அட்லான்டிக் பெரும்பிழை எனவும், இந்த பாவத்தை கூச்சமின்றி செய்வதாக கூறினார். அகண்ட பாரதம் என்ற ஆர்எஸ்எஸ் அஜந்தாவை நிறைவேற்றுவதற்காக 5 மாநில சட்டசபை தேர்தலின் போது தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்படுகிறது என்றார். ஒன்றிய அரசின் அறிவுறுத்தல்படி குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு, பிரதிநித்துவம் குறைவாகும் என்றார்.
தொகுதி மறுவரையறையை தவெக வன்மையாக கண்டிப்பதாகவும், தேர்தல் முடிந்த பிறகு தவெக சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என தலைவர் விஜய்யிடம் வலியுறுத்துவேன் என்றார். மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா என்பது கண்துடைப்பு எனவும், மகளிருக்கான இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் 50%ஆக உள்ளது என்றார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு தலைவரையே அழைக்காதவர்கள் பாஜகவினர் எனவும், பெண்களை மதிக்காத கட்சி பாஜக எனவும், பெண்களை கொண்டாட மறுக்கிற கூட்டம் ஆர்எஸ்எஸ் கூட்டம் எனவும், இட ஒதுக்கீடு என்ற பெயரில் அரசியல் செய்கிறார்கள் எனவும், இந்த அரசியலுக்கு ஆயுள் குறைவு எனவும் கூறினார்.






