திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக அரசியலில் நீண்டகாலமாக இணைந்து பயணித்து வரும் கூட்டணி உறவைக் கொண்டுள்ளன.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்று வருகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலில் விசிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அது 6 தொகுதிகளாகக் குறைக்கப்பட்டது. இதனால் விசிக தரப்பில் சில அதிருப்திகள் எழுந்தாலும், பாஜகவின் மதவாத அரசியலைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் கூட்டணியைத் தொடர்ந்து வருகிறார்கள். விசிக தன்னை வெறும் இடங்களுக்காகப் பேரம் பேசும் கட்சியாகக் கருதவில்லை என திருமாவளவன் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தைக் குழு தொகுதி பங்கீடு குறித்து பலமுறை ஆலோசித்தது. இருப்பினும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்து இருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் எட்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை கூடுதலாக கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. ஆறு தனி தொகுதி மற்றும் இரண்டு பொது தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று சமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.









