சென்னை: நாளை மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவந்தார். குறிப்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
சட்டப் பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் நடைபெறும் ஆளுநர் உரையை படிக்காமல் புறக்கணித்துவந்தார். அவர் பங்கேற்கும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஆளுநரை முதல்வர் விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஆர்.என்.ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.






