தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத மாநிலமாக” மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது மேலும் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3,500 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குடிசை வீடுகள் மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், சொந்தமாகப் பட்டா இருந்தும் வீடு கட்ட வசதியில்லாத ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். தகுதியுடைய ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 360 சதுர அடி பரப்பளவில், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வீடற்ற விளிம்புநிலை மக்களின் சொந்த வீடுகனவை நனவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.தமிழக அரசு 2030-ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 8 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதியின் மூலம் கட்டுமானப் பணிகள் மேலும் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.







