தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.
தற்போது வரை 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தும் என ஆளும் கட்சி ஏற்கனவே சொல்லியிருக்கிறது.
இந்நிலையில் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் அனைவருக்கும் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு காலையிலேயே ஜாக்பாட் அடித்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதனை காரணம் காட்டி மகளிர் உரிமை தொகையை நிறுத்த பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனால் நம்முடைய திராவிட மாடல் அரசு முன்கூட்டியே பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை பணத்தை வரவு வைத்து விட்டது. இதனை மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இந்த ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி தான் மகளிர் உரிமைத் தொகை. இந்தத் திட்டத்திற்கு யார் தடை ஏற்படுத்த நினைத்தாலும் அதனை முறியடிப்பேன்.
வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை முடக்க பலரும் நினைக்கிறார்கள். ஆனால் திராவிட மாடல் அரசு இந்த விஷயத்தில் முந்திக் கொண்டது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மொத்தமாக 1.31 கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் தான் வெல்வோம். மீண்டும் ஆட்சிக்கு வந்து, மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவேன்” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எப்போதும் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் 15ஆம் தேதியில் தான் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இம்மாதமும் ஒரு நாளுக்கு முன்பாகவே இன்று 14-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அதிலும் கூடுதல் அம்சமாக அடுத்து வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து முன்பணம் ரூ.2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதோடு கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தமாக ரூ.5,000 வழங்கப்பட்டிருப்பது, தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







