அமெரிக்கா தான் குறி.. பாக் ரகசியமாக தயாரிக்கும் ICBM ஏவுகணை.. டிரம்ப் கொடுக்கப்போகும் அடி

ஸ்லாமாபாத்: அமெரிக்காவை குறிவைத்து சீனா உதவியுடன் பாகிஸ்தான் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரகசியமாக தயாரித்து வருகிறது.இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதனை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ள நிலையில் பாகிஸ்தானை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் ட்ரோன், ஏவுகணையால் பாகிஸ்தானை நம் வீரர்கள் தாக்கினர். பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளம் உள்ளிட்டவற்றை நம் படை வீரர்கள் அழித்தனர்.இதில் கோபமான பாகிஸ்தான் நம் நாட்டின் மீதும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்த முயன்றது. அதனை நம் நாடு முறியடித்தது. இறுதியில் நம் நாடு கொடுத்த அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்சி மோதலை நிறுத்தியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் தனது ஏவுகணை பிரிவை வலுப்படுத்த நினைக்கிறது.அந்த வகையில், பாகிஸ்தான் தற்போது அணுஆயுதத்தை சுமந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் (Nuclear Tipped Intercontinental Ballistic Missile) ஏவுகணையை ரகசியமாக தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. பாகிஸ்தானிடம் தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லை.அதேவேளையில் அணுஆயுதத்தை பாகிஸ்தான் வைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் அணுஆயுதத்தை சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்தால் அது பல நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும்.இது நம் நாட்டுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் தற்போது தயாரிக்கும் ஏவுகணையின் ரேஞ்ச் என்பது மிகவும் அதிகமாகும். சுமார் 5,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் தன்மை கொண்டதாக இந்த ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்க நினைத்துள்ளது.பாகிஸ்தானை எடுத்து கொண்டால் ஏவுகணை உள்பட பாதுகாப்பு துறையுடன் உள்ள எந்த படைப்பிரிவை வலுவாக்கினாலும் கூட இந்தியாவை சமாளிக்க தான் என்று சொல்வது உண்டு. அந்தவகையில் தற்போது பாகிஸ்தானிடம் தற்போது ஷாகின் III என்ற ஏவுகணை உள்ளது.இந்த ஏவுகணை கடந்த 2022ம் ஆண்டில் பரிசோதனை செய்யப்பட்டது. இது தரையில் இருந்து ஏவி எதிரிகளின் தரைப்பகுதியில் உள்ள கட்டமைப்புகளை சிதைக்கும் தன்மை கொண்டது. இதன் ரேஞ்ச் 2,700 கிலோமீட்டராகும். இந்த ஏவுகணையை பயன்படுத்தி நம் நாட்டின் பெரும்பாலான நகரங்களை பாகிஸ்தான் தாக்க முடியும். இப்படியான சூழலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரகசியமாக பாகிஸ்தான் தயாரித்து வருவது அமெரிக்காவை கோபப்படுத்தி உள்ளது.பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அமெரிக்கா தாக்கும் அளவுக்கு இந்த ஏவுகணை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது தான் அந்த நாட்டின் கோபத்துக்கு காரணமாகும். இந்த ஏவுகணை தயாரிப்புக்கு சீனா தான் பாகிஸ்தானுக்கு உதவுகிறது. இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் அமெரிக்க உளவுத்துறை அதனை மோப்பம் பிடித்துள்ளது.பொதுவாக அணுஆயுதம் வைத்துள்ள நாடுகள் அனைத்தும் பிற நாடுகளுக்கு எதிரியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அணுஆயுதம் வைத்துள்ள நாடுகளை அமெரிக்கா எதிரியாகவே கருதுகிறது. பொதுவெளியில் நல்லுறவு வைத்திருப்பது போல் அமெரிக்கா நடந்து கொண்டால் உண்மையில் அப்படி கிடையாது என்கின்றனர் நிபுணர்கள்.இப்படியான சூழலில் இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்தால் அணுஆயுத ஆபத்து கொண்ட எதிரி நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க அமெரிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த பட்டியலில் தற்போது ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியா நாடுகள் உள்ளன. அந்த வரிசையில் பாகிஸ்தானும் அந்த பட்டியலில் இணையும்.இதுபற்றி அமெரிக்காவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உற்பத்தி செய்தால் எங்களுக்கு வேறு வழியில்லை. அந்த நாட்டை அணுஆயுதம் வைத்திருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில் சேர்த்து விடுவோம். ஏனென்றால் அமெரிக்கா நட்பு நாடுகளாக கருதும் எந்த நாடுகளும் அமெரிக்காவை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வைத்திருப்பது இல்லை” என்றார்.மேலும் அமெரிக்கா – பாகிஸ்தான் உறவை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு மிகவும் மோசமாக இருந்தது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் லாங்க் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் திட்டத்தை கண்டித்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இப்போது டிரம்ப் வந்த பிறகு அந்த நிலை மாறி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை அழைத்து லஞ்ச் வழங்கினார். இப்போது அமெரிக்காவை குறிவைத்து சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரிக்கிறது. இதனால் ரஷ்யா, சீனா, வடகொரியாவுடன் அணுஆயுத எதிரி நாடுகளின் பட்டியலில் டிரம்ப் பாகிஸ்தனை சேர்க்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் டிரம்ப் தலையிட்டு இந்த திட்டத்தை முடக்கலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.