ஈரானை கைவிட்ட ரஷ்யா? அமெரிக்காவை கண்டு அச்சம்? அதிபர் புதின்!

மாஸ்கோ: இஸ்ரேல் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வரும் எனச் சொல்லப்பட்டது.குறிப்பாக ரஷ்யா இதில் களமிறங்கும் என்றே பலரும் கருதினர். ஆனால், ரஷ்யா இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அமைதி காத்தே வருகிறது. இதற்கிடையே ரஷ்யா இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து அந்நாட்டின் அதிபர் புதின் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் இப்போது அடுத்த கட்டத்திற்குப் போய்விட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டுள்ளது. ஆனால், இதில் அமெரிக்கா தலையிட்டால் பிற உலக நாடுகளும் உள்ளே வரும் எனச் சொல்லப்பட்டது. குறிப்பாக ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா வரும் என்றும் ஈரானுக்கான ஆயுங்களை ரஷ்யா சப்ளை செய்யும் எனச் சொல்லப்பட்டது.இருப்பினும், இந்த விவகாரத்தில் ரஷ்யா தொடர்ந்து அமைதியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஈரானின் அணு சக்தி தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகும் கூட ரஷ்யா ஏன் ஈரானுக்கு நேரடியாக உதவி செய்யாமல் ஒதுங்கி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கிடையே இதற்கான பதிலை அதிபர் புதினே கொடுத்திருக்கிறார்.ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. ஆனாலும், இப்போது இஸ்ரேலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய மொழி பேசும் மக்கள் வசிப்பதால் இந்த மோதலில் இருந்து ரஷ்யா விலகியே இருக்கிறது. புதினும் கூட ரஷ்யாவின் நடுநிலை நிலைப்பாட்டிற்கு இதுவே காரணம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதின் பேசுகையில், “சோவியத் ஒன்றியம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் இருந்து சுமார் 20 லட்சம் மக்கள் இஸ்ரேலில் வசிக்கிறார்கள். இன்று அது கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் பகுதியாகவே மாறிவிட்டது. இதுவும் ரஷ்யாவின் வரலாற்றின் ஒரு பகுதிதான். இதன் காரணமாகவே நாங்கள் நடுநிலையாக இருக்க முயல்கிறோம்” என்றார்.மேலும் ரஷ்யா தனது நட்பு நாடுகளிடம் விசுவாசமாக இல்லை என்று சிலர் விமர்சிப்பதாக எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அவர். “இதுபோல விமர்சிப்போர் வேண்டும் என்றே பிரச்சினையைத் தூண்டிவிட முயல்கிறார்கள். பல ஆண்டுகளாகவே அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் ரஷ்யாவுக்கு நல்லுறவு இருக்கிறது. ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பதையும் நான் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிலும் (OIC) ரஷ்யா ஒரு பார்வையாளராக இருந்து வருகிறது” என்றார்.ஈரான் இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மோதல் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டுத் தாக்குதலை நடத்தியது. சுமார் 14,000 கிலோ எடை கொண்ட பங்கர் பஸ்டர் வெடிகுண்டு மூலம் அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத தளங்களைத் தாக்கியது. ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று இடங்களில் உள்ள ஈரானின் தளங்களை அமெரிக்கா தாக்கியது.இந்த தாக்குதல் அமெரிக்க ராணுவத்திற்கு வெற்றி என்று டிரம்ப் கூறினார். மேலும் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்றும் டிரம்ப் கூறினார். அதேநேரம் இந்த தாக்குதலால் தங்கள் அணு சக்தி செயல்பாடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றே ஈரான் கூறியது. மேலும், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் பல ஏவுகணைகளை ஏவியது.