மதுரையில் உள்ள பாண்டிக்கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.இதில் இந்து மதத்தைச் சேர்ந்த முக்கிய குருமார்கள், பீடாதிபதிகள், துறவிகள் பங்கேற்றனர்.ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது, “உலகில் யூதர்கள் 0.2 சதவீதம் பேர் தான் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்ததற்காக அவர்கள் 4 நாடுகளை எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, இந்தியாவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்து வாழ்வியல் முறையை பின்பற்றுபவர்களை குறிவைத்து பயங்கவாதிகள் கொலை செய்தனர்.பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் விதமாக இந்தியா எல்லை தாண்டி ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தியா எழுந்து நின்று திருப்பி அடித்தது. ஆனால், இந்தியாவில் சிலருக்கு ஆப்ரேஷன் நடவடிக்கை எடுத்தது பிரச்சனையாக இருக்கிறது.இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்ற தைரியம் அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அதை நாம் உடைக்க வேண்டும். இந்த மாநாடு தேர்தலுக்காக அல்ல. அதேவேளை 2026 தேர்தலில் மக்கள் தங்களுக்கு நிதி வேண்டாம், சாமி வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்கள். யார் அந்த நிதி யார் அந்த சாமி என்பதை மக்களே புரிந்து முடிவு செய்துகொள்வார்கள்.இந்துக்களின் வாக்கை பெற்றுக்கொண்டு கோயில்களை அவமதிக்கின்றார்கள். திருநீறை அழித்துக் கொண்டு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். மதுரையில் 5 லட்சம் பேர் இந்த மாநாட்டிற்காக திரண்டிருக்கின்றார்கள் இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணி.சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சொத்து மதிப்பை வெளியிட்டனர். திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு என்பது 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி என்று தெரியவந்தது. தமிழ்நாட்டு அரசின் ஓராண்டு பட்ஜெட் என்பது வெறும் 3 லட்சம் கோடிதான். அதனால், ஆன்மீகம் சார்ந்த அரசியல், ஆன்மீகம் சார்ந்த வாழ்வியல், ஆன்மீகம் சார்ந்த பொருளாதாரம் வரும்போதுதான் முருகன் நிம்மதியாக இருப்பார்” என்றார்.
‘நிதி’ வேண்டாம்.. ‘சாமி’ வேண்டும்.முருகர் மாநாட்டில் அண்ணாமலை கொடுத்த அரசியல் மெசேஜ்
