சென்னை: தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் நடந்தது வெறும் சிலிண்டர் வெடிப்பு விபத்து என திமுக அரசு கூறிய நிலையில், அச்சம்பவத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.தமிழகத்தில் பயங்கரவாதத்துக்கான ஆலைகளாக செயல்பட்டு வந்த அரபி வகுப்பறைகளில் பயங்கரவாதத்துக்கான மூலைச் சலவை செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களை திமுக குறைத்து மதிப்பீடுவதுடன், குண்டுவெடிப்பு சம்பவங்களை வெறும் விபத்து போல காட்ட முனைகிறது. திமுக அரசால் பாதிக்கப்பட போவது, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழகம் அமைதி பூங்கா என்றும், நடைபெற்றது வெறும் சிலிண்டர் குண்டு வெடிப்பு தான் என்றும் கதை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இப்போதாவது விழித்து கொண்டு பயங்கரவாதத்தை வேரறுக்க துணைபுரிவார்களா? அல்லது ஒரு மதத்தின் ஓட்டுக்காக பயங்கரவாதத்தை கண்டிக்காமல் அமைதி காப்பார்களா?தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை தமிழகத்தில் விதைக்க முற்படுவோரை மதம் சார்ந்து பார்ப்பதும், அமைதி காப்பதும் மதவாதம் தானே? என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் க்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க்: அண்ணாமலை குற்றச்சாட்டு
