ஒரே நாள் இரவில் 355 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்…!

ஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே 3-வது ஆண்டாக போர் நீடித்து வருகிறது.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

கடுமையான போர் தொடர்ந்து வரும் நிலையில் ஒப்பந்தப்படி, இரு நாடுகள் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றமும் நடந்து வந்தது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை, கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 390 பேர், சனிக்கிழமை 307 பேர், ஞாயிற்றுக்கிழமை 303 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான டிரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் அணிவகுத்த டிரோன்கள் குறித்து உக்ரைன் ராணுவத்தினர் தெரிவிக்கையில், “உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறி வைத்து திங்கட்கிழமை இரவில் ரஷ்யா 355 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும்.

இதில் சிலர் காயம் அடைந்து உள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளது.மேலும், டிரோன் தாக்குதலுக்கு முந்தைய நாள், ரஷ்யா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கும் முந்தைய நாள் ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.