*தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு !!!*

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது. கோவையில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்த மழையால் கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடைவிதித்து உள்ளனர். இந்நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பனையான சித்திரைச் சாவடி தடுப்பனையை தாண்டி மழை நீர் பாய்ந்து ஓடியது. இதனை அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து பேரூர் படித்துறையை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் படித்துறையில் பெருக்கெடுத்து ஓடிய மலை வெள்ளத்தை பார்த்து ரசித்தனர். நொய்யல் ஆற்றில் வரும் நீர் கோவையில் உள்ள வேடப்பட்டி புதுக்குளம் செங்குளம் உள்ளிட்ட குளங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளது. மேலும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் காரணமாக பொதுமக்கள் யாரும், ஆற்றில் இறங்கவோ, குடிக்கவோ அல்லது துணி துவைக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் புட்டுவிக்கி குனியமுத்தூர் ஆகிய தடுப்பணைகள் மழையால் நிரம்பி வழிகிறது. கோவை மாநகராட்சி குடிநீர் வழங்கும் முக்கிய அணையான சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் 120 மில்லி மீட்டர் மழையும், சிறுவாணி அடிவார பகுதியில் 128 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இந்த அதி கன மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்து உள்ளதால் குடிநீருக்கு எடுக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணையில் இருந்து தற்போது நாளொன்றுக்கு 65.08 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு கோவை மாநகராட்சிக்கும், வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் விநியோகம் செய்யப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நொய்யல் ஆற்றில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டு, தற்பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு கோடை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.