கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவது கோவை மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது சிறுவாணி அணை. இது பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பின்னர், வழியோரம் உள்ள 22 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், கோவை மாநகராட்சியின் 30 க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. போதிய மழை இல்லாததால் இந்த மாத துவக்கத்தில், 17 அடிக்கும் குறைவாகவே அணையின் நீர்மட்டம் இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டிய பகுதிகளில், நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சனிக்கிழமை காலை, 8 மணி நிலவரப்படி, அடிவாரத்தில், 53 மி.மீ, மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 80 மி.மீ மழையும் பதிவானது. இதன் காரணமாக 19 அடியாக நீர் மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்காக, 6.2 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்தது. அதாவது, அடிவாரத்தில், 73 மி.மீ மழையும், அணைப்பகுதியில், 85 மி.மீ மழையும் பதிவான நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, 8 மணி நிலவரப்படி நீர் மட்டமானது, 21.55 அடியாக உயர்ந்திருந்தது. கோவை மக்களின் குடிநீர் தேவைக்காக, 6.7 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்றும் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணை மொத்த உயரம் 49.5 அடி. இன்று காலை நிலவரப்படி அணையில் 26.6 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
கனமழை நீடிப்பதால் சிறுவாணி அணைக்கு பட்டியாறு, முக்தியாறு உள்பட 32 ஓடைகளின் மூலமாக வெள்ளம் பாய்ந்து வருகிறது. சிறுவாணி அணை நீரை சுத்தம் செய்ய முன்பை விட இரு மடங்கு அதிகமாக ஆலம், படிகாரம் கலக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் தெளிவிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.