ஜம்மு: ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மீண்டும் புதன்கிழமை(மே 14) மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரகத்தின் உத்தரவில் பள்ளிகள் மூடலுக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை.
இதுதொடர்பாக கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
ஜம்மு, ரஜௌரி, பூஞ்ச் மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் புதன்கிழமை மூடப்படும். இருப்பினும், கதுவா மாவட்டத்தின் உதம்பூர் மற்றும் பானி, பஷோலி, மகான்பூர், பட்டு, மல்ஹார் மற்றும் பில்லாவர் மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களின் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்திய ராணுவம் கடந்த மே 6 ஆம் தேதி நள்ளிரவு அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தாக்குதல்களின் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.
பாகிஸ்தானின் அடுத்தடுத்த ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய ஆயுதப்படைகள் திறம்பட முறியடித்தன மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல விமான தளங்களைத் தாக்கின.
இந்த நிலையில், இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக மே 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை அடுத்து துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.