கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் (69) புதிய போப் ஆண்டவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14ம் லியோ (leo XIV) என்ற பெயருடன் தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
‘புனித போப் 14ம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையின் கொள்கைகளை முன்னேற்றுவதில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்குகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, புனித ரோம் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்ந்து உரையாடலுக்கும், ஈடுபாட்டிற்கும் இந்தியா உறுதி பூண்டுள்ளது’ இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.