நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு – மர்ம நபர் கைவரிசை..!

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 74). இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி அருகில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து நகையுடன் தப்பி சென்றார். பின்னர் இது குறித்து பழனியம்மாள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.