ஆட்டோ கவிழ்ந்து 4 பள்ளிக் குழந்தைகள் படுகாயம் – போதை டிரைவர் மீது வழக்கு.!!

கோவை சிவானந்தாகாலனி டாங்க் ரோடு அருகே நேற்று 11 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவேக் என்ற நிகா ( வயது 31) ஓட்டினார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த கண்ணப்பன் நகர் தேவராஜன் மகள் பூஜா (வயது 11) கோவிந்தசாமி நகர் கெம்பையா மகன் தஸ்வின் (வயது 12) சேட்டு மகன் தனுஷ் ராஜ் (வயது 10 ) ஹரிஷ் ( வயது 8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்ப இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ஆட்டோ டிரைவர் விவேக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.