தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 4 காவலர்கள் பணியிட மாற்றம்.!!

சென்னை: தமிழக காவல் துறை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்த பி.விஜயகுமாரி, அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் மாவட்ட தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த என்.காமினி, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் மாவட்ட தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமையிட காவல் துணை ஆணையராக இருந்த எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், எஸ்.பி. ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.