கோவை வாலாங்குளத்தில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது..!

கோவை வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக காதல் ஜோடிகளை அதிகம் பார்க்க முடிகிறது. அங்கு காதல் ஜோடிகளிடம் செல்போன்களை பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பெரிய கடை வீதி காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை பிடிக்க காவல் துறை தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனிப்பட்ட போலீசார் வாலாங்குளக்கரை பகுதியை ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் கோவையைச் சேர்ந்த மவுலிதரன், சஞ்சய், சதீஷ்குமார், மகேந்திரன் என்பதும் அவர்கள் குளக்கரையில் காதல் ஜோடிகள் மிரட்டி செல்போன்களை பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல் துறை கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..