கோவையில் காரில் வந்து தொடர் வழிபறியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று இரவு சிறுமுகை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார்.
அப்போது திடீரென அவரை கார் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்த இறங்கிய 3 பேர் திருமலைச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அவர்கள் காரில் தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து திருமலைச்செல்வன் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிறுமுகை பகுதியை சேர்ந்த கார்த்தி (24), வீராசாமி (24) மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (25) என்பதும், அவர்கள் சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் வழிபறிக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.