முன்பகை காரணமாக டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்திக் குத்து – கோவையில் வெறிச்செயல் ..!

கோவை குனியமுத்தூரில் முன்பகை காரணமாக டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்திக் குத்து

கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது.

மேலும், திருடிய பொருட்களை திரும்ப ஒப்படைப்பதற்கு ரூ. 10 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனை சசி தனது நண்பரான வாட்டர் கேன் சப்ளையரான மாரிமுத்து (35) என்பவரிடம் சம்பவம் குறித்து தெரிவித்து, அவரிடம் ரூ. 10 ஆயிரம் வாங்கி பூவேந்திரனிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், பணத்தை பெற்று கொண்ட பூவேந்திரன், சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டதால், அவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாரிமுத்து, அவரது நண்பர்களான டிரைவர்கள் குனியமுத்தூர் ஆதி, சேகர் , சுஜித் ஆகியோருடன் குனியமுத்தூர் சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு தாபாவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, பூவேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்தார். அப்போது மீண்டும், மாரிமுத்து தரப்புக்கும், பூவேந்திரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பூவேந்திரன் உட்பட 4 பேர் கும்பல் மாரிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலை, தோள்பட்டையில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவர் மீதான தாக்குதலை, அவருடன் இருந்த சேகர் மற்றும் சுஜித் தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் சேகர் மற்றும் சுஜித்தையும் தாக்கினர்.

பின்னர் 4 பேரும் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கத்திக் குத்தில் மாரிமுத்து, சேகர், சுஜித் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் பூவேந்திரன் உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.