பாலியல் வழக்கில் சாதகமாக சாட்சி சொல்ல மிரட்டிய 3 பேர் கோவையில் கைது…

பாலியல் வழக்கில் சாதகமாக சாட்சி சொல்ல மிரட்டிய 3 பேர் கைது…

கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது நபர். இவரது மகள் கடந்த 2019 ம் ஆண்டு சில வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இது குறித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவை வடவள்ளி தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (எ) பப்ஸ் கார்த்திக் (29), ஆட்டோ மணி (33), பி.என் புதூர் பொன் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ராகுல், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் பிரகாஷ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர்கள் அடிக்கடி பெண்ணின் தந்தையை வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று செல்வபுரம் பகுதியில் பெண்ணின் தந்தை நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி உள்ளிட்டோர் பெண்ணின் தந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் கோர்ட்டில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொன்னால் ரூ. 15 லட்சம் தருகிறோம் என தெரிவித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணின் தந்தையை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்  மியாட்டி மனோகரன் மற்றும் காவலர்கள் அவர்களைத் தேடிப் பிடித்து வழக்குப் பதிவு செய்து பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் பப்ஸ் கார்த்திக் மீது போக்சோ, பெண்கள் வன் கொடுமை உள்ளிட்ட 7 வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.