கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் பலியான பரிதாபம்:மதுரை மாநகராட்சி ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்கு.!!

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அங்குள்ள பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த இரு தினங்களாக அந்தக் கழிவுநீர் தொட்டியில் இருக்கம் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஊழியர்கள் மோட்டாரை பழுது பார்க்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று இரவு மாடக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் (45), மின்மோட்டாரை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக, கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற மாடக்குளம் சரவணன் (32), அலங்காநல்லூர் லட்சுமணன் (31) ஆகியோர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால், அவர்களும் தொட்டிக்குள் சிக்கிக் கொண்டனர்.

3 பேரின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விஷவாயு அபாயம் இருந்ததால் அவர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த 3 பேரையும் மீட்கும் பணியில் கவனமாக ஈடுபட்டனர். மிகவும் சிரமப்பட்டு சுமார் 30 அடி ஆழத்தில் இறங்கி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் 3 பேரும் விஷவாயு தாக்கி, இறந்துவிட்டதால் அவர்களை பிணமாகவே மீட்க முடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்எஸ் காலனி போலீசார்,VGR என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே, 3 பேரின் இறப்பிற்கு காரணம் என்று அவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.