பிறந்தநாளில் கணவர் மது குடித்து வந்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை..

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.நேற்று சரவணனுக்கு பிறந்த நாள்.இதனால் மகஸே்வரி தனது கணவருடன் கோவிலுக்கு செல்வதற்கு முடிவு செய்தார். இதற்காக காலையிலேயே எழுந்து தனது மகன்களை புறப்பட வைத்து பள்ளிக்கு அனுப்பினார். பின்னர் கணவருடன் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது சரவணன் வீட்டிற்கு குடிபோதையில் வந்தார். இதனை பார்த்த மகேஸ்வரிக்கு கோபம் ஏற்பட்டது. பிறந்தநாள் அன்று கூடவா குடித்து விட்டு வருவீர்கள் என கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கோபம் அடைந்த மகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் இறந்தார்.இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..