ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனா பயணம்

புதுடெல்லி:சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று தொடங்கியது.இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் சீனா, இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சீனா புறப்பட்டுச் சென்றார். ஏற்கெனவை சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் இ மற்றும் துணை அதிபர் ஹான் ஜெங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலும் தோவல் பங்கேற்க உள்ளார்.இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில், ‘குவிங்டாவ் நகரில் நடைபெறும் எஸ்சிஏ பாதுகாப்பு துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். இதில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கவும் ஆவலாக உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.மேலும் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஆழமான வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் ராஜ்நாத் சிங் வலியுறுத்த உள்ளார். இந்த பயணத்தின்போது, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களை தனியாக சந்தித்துப் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்களுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.அத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக் எல்லையில் சீனா மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு போர் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பும் எல்லையில் படைகளை குவித்தன.இதனால் இருதரப்பு உறவு மோசமடைந்தது. அதன் பிறகு ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் பல்வேறு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு படைகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து போர் பதற்றம் தணிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அமைச்சர் ஒருவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.