கடம்பூர் மலைப்பகுதியில் காரில் குட்கா கடத்திய இருவர் கைது – 8 கிலோ குட்கா பறிமுதல்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் சட்ட விரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடம்பூர் போலீசார் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குன்றி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.  அப்போது காரில் இருந்த நபர்கள் முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை வியாபாரம் செய்து விட்டு காரில் வந்ததாக தெரிவித்தனர். காரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களுக்கு இடையே போலீசார் சோதனை இட்டபோது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் பான் மசாலா, கூல்லிப், வி1 டொபாக்கோ உள்ளிட்ட எட்டு கிலோ எடையுள்ள போதை பாக்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த பங்களாபுதூர் இந்திரா நகரை சேர்ந்த முகமது யாசின்(38), கோபி நஞ்ச கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து (45) ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து நிலைய பிணையில் விடுவித்தனர்.  குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்..