திருவாடானை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இருவர் காயம்

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஷா, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சென்று மீண்டும் தேவகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னகீரமங்கலம் அருகே உள்ள வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (43) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷா ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவ்வழியே வந்த இளைஞர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவாடானை காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.