தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு…

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது அக்கட்சியின் இளைஞரணி தான். முதல்வர் ஸ்டாலினால் 1980-ம் ஆண்டு திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி ஒப்படைக்கப்பட்டதில் இருந்து எந்நேரமும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி, டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் மிகப்பெரிய அளவில் இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்தார். இதற்காக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், இரு சக்கர பேரணி தொடங்கப்பட்டது.

இதற்காக ஏற்பாடுகள் சேலத்தில் நடந்து விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்தது. இதன் காரணமாக டிசம்பர் 24-ம் தேதிக்கு மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞர் அணி மாநாடு மீண்டும் இரண்டாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.