சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது தவறில்லை – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்.!!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை திரும்பப்பெறுவதாக லஞ்சஒழிப்புத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற சிவகங்கை நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோரை விடுவித்து கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார். அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் மும்பை மூத்த வழக்கறிஞர் ஆபாத் பாண்டா மற்றும் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கில் லஞ்சஒழிப்புத் துறை மறுவிசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை. அதேபோல மேல் விசாரணைக்குப்பிறகு இந்த வழக்கை முடித்து வைத்து லஞ்சஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ததிலும் எந்த தவறும் இல்லை. தாமாக முன்வந்து மறுஆய்வு செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இருக்கிறது என்றாலும், அதற்காக 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை மறுஆய்வு செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டியே சிவகங்கை நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில் எந்த தவறும் கிடையாது. இவ்வாறு வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை வரும் ஏப்.8-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.